விநாயகர் சதுர்த்தி: பல வடிவங்களில் சிலைகள் செய்யும் பணி தீவிரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவையில் தெலுங்குபாளையத்தில் பல வடிவங்களில் விநாயகர் சிலைகளை தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகர் சிலைகளை வீடு மற்றும் பொது இடங்களில் வைத்து பூஜிப்பது வழக்கம். பின், மூன்று முதல் 5 வது நாளில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைத்து விடுவர்.

இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, பொது இடங்களில் பிரதிஷ்டை செய்வதற்கான பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் செய்யும் பணி துவங்கி உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக விநாயகர் சிலை தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கி உள்ளதால் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிலை தயாரிப்பாளர்கள் கூறுகையில், விநாயகர் சிலைகள் 5 அடி முதல் 12 அடி வரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில், ரசாயனம் பயன்படுத்தாமல் மர வள்ளி கிழங்கு, காகிதக்கூழ் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

நந்தி விநாயகர், ராஜகணபதி, வீரசிவாஜி, புல்லட் ஒட்டும் கணபதி உட்பட பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்படுகிறது. மேலும், ரிஷப வாகனம், சர்ப்பம், மயில், அன்னம் உள்ளி்ட்ட வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பது போல சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.