சென்னை வரும் பிரதமர் மோடி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் தொடக்கவிழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதில் கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.

2 நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வரும் அவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் பிரதமரின் வருகையையொட்டி, சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணமாக தற்காலிக தடைவிதிக்கப்பட்ட டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.