உப்பில் வரைந்த செஸ் சின்னம்

தமிழகத்தில் சர்வதேச செஸ் போட்டி நடைபெற உள்ள நிலையில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் சின்னத்தை பிரம்மாண்டமான முறையில் வண்ண வண்ண உப்பில் வரைந்து அசத்தியுள்ளனர்.

சென்னையில்  வரும் 29 ம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ம் தேதி வரை 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இந்தப் போட்டியின் துவக்க விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் “செஸ் ஒலிம்பியாட் 2022” போட்டிக்கான சின்னம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ‘செஸ் தம்பி’ என்ற இந்த சின்னம் தமிழக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. செஸ் விளையாட்டில் இருக்கும் குதிரை வேட்டி கட்டிக்கொண்டு வணக்கம் கூறி வரவேற்பதை போல அந்த சின்னம் அமைந்துள்ளது.

இந்நிலையில், கேம்போர்டு பள்ளி மாணவர்கள் செஸ் சின்னத்தை 40 அடி உயரம் 20 அடி அகலத்தில் வண்ண வண்ண உப்பை கொண்டு வரைந்துள்ளனர். இதில், 40 மாணவர்கள் இணைந்து 2 மணி நேரத்தில் இந்த சின்னத்தை வரைந்து அசத்தியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கேம்போர்டு பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை, முதல்வர் பூனம்சியல் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.