இன்க் பேனாவால்  ஒரு நிமிடத்தில் 1330 திருக்குறள் எழுதி சாதனை

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக  மாணவ,மாணவிகள் ஒரு நிமிடத்தில் இன்க் பேனாவினால் 1330 திருக்குறள் எழுதி உலக சாதனை முயற்சி செய்துள்ளனர்.

கோவையில் உள்ள கோவைப்புதூர் ஆஸ்ரமம் பள்ளியில் காமராஜர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. காமராஜர் பிறந்தநாளன்று பள்ளிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக  மாணவ,மாணவிகள் ஒரு நிமிடத்தில் இன்க் பேனாவினால் 1,330 திருக்குறள் எழுதி உலக சாதனை முயற்சி ஈடுபட்டனர்.

இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக, கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், இளம்படை இயக்குனர் சித்ரவேல், இக்னீசியஸ் பிரபு, வழக்கறிஞர் சிவஞானம், டிஸ்கோ காஜா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக “ஸ்வீப்பர்ஸ் ஏன்தெம்” எனும் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக சாய் புவனேஸ்  எழுதிய பாடல் வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, மாணவ,மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி புதிய  உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.  இது தொடர்பாக, பள்ளிகளில் பயன்படுத்தப்படும் பால் பாயிண்ட் பேனா எனும் பிளாஸ்டிக் ரக பேனாவால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மை ஊற்றி எழுதும் பேனாவை பயன்படுத்தி 1330 திருக்குறளை ஒரு நிமிடத்தில் எழுதி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

இது குறித்து பள்ளி நிர்வாகி தேவேந்திரன் மற்றும் கௌரி உதயேந்திரன் பேசுகையில், பள்ளி மாணவர்களிடையே மை ஊற்றி எழுதும் பேனாவில்  எழுதுவதை ஊக்குவிக்கும் விதமாக இந்த சாதனை நிகழ்வை நடத்தியதாக தெரிவித்தனர். மாணவர்களின் இந்த சாதனையை தாய்த்தமிழ் உலக சாதனை புத்தகத்தின் ஒருங்கிணைப்பாளர் சமாதான மேரி தொகுத்து வழங்கினார்.