ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால்  5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை வடதமிழகம், தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, குமரி, புதுச்சேரி பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.

ஜூலை 15 முதல் 17ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளையும், நாளை மறுநாளும் கர்நாடகா, மத்திய, தெற்கு அரபிக் கடலில் பலத்த காற்று வீசக்கூடும். நாளை தமிழக கடலோரம், மத்திய அரபிக்கடல், தெற்கு வங்கக்கடல், ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி வீசக்கூடும்.

இங்கு மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 16ல் கர்நாடக கடலோர பகுதிகள், மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். ஜூலை 17ல் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.