பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்துக்கொள்ள கூடாது – போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபகாலமாக பேருந்தில் பயணிக்கும் பெண் பயணிகளிடம், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தரக்குறைவாகவும், மரியாதையின்றியும் செயல்படுவதாக ஏராளமான புகார்கள் எழுந்துள்ள நிலையில், போக்குவரத்துத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, ஓட்டுநர்களும், நடத்துநர்களும் நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடித்து பேருந்தை இயக்க வேண்டும். பேருந்து நிறுத்தத்தில் நிறையா பயணிகளோ, ஒரு பயணியோ பேருந்துக்காக நிற்கும் போது பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றி செல்ல வேண்டும்.

அனைத்து பேருந்து ஓட்டுநர்களும் பேருந்தை பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் பேருந்தை நிறுத்தக் கூடாது. நடத்துநர்கள் வயதானவர்களிடமோ பெண் பயணிகளிடமோ எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, பேருந்திலிருந்து பாதியில் இறக்கி விடவோ, இழிவாகவோ நடந்து கொள்ளக் கூடாது.

பெண் பயணிகள் ஏறும் போதும் இறங்கும் போதும் கண்காணிக்க வேண்டும். பயணிகளை பாதுகாப்பாக பேருந்தில் ஏற்றி இறக்க வேண்டும்.

பேருந்தை குறுக்கு நெடுக்காக நிறுத்தாமல், ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக நிறுத்த வேண்டும். மேலும், பேருந்தில் பயணிகள் இறங்கி ஏறிய பின், ஓட்டுநர் பேருந்தை இயக்க வேண்டும்.

மேலும், பேருந்து புறப்பட்ட பின், பயணிகள் ஓடி வந்தால், பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றி செல்ல வேண்டும். கதவுகள் இல்லாத பேருந்தில் பயணிகள் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்ய அனுமதிக்க கூடாது.

நடத்துநர் பேருந்து நிறுத்தம் வருவதை முன் கூட்டியே பயணிகளிடம் தெரிவிக்க வேண்டும். ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பேருந்தை இயக்கும் போது செல்போன் பயன்படுத்த கூடாது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.