விலங்குகளுக்கு மத்தியில் சேவை புரிந்த மாமனிதர்

“அம்மா… போஸ்ட், அய்யா… மணி ஆர்டர் வந்திருக்கு வந்து கையெழுத்து போட்டுட்டு வாங்கிக்கோங்க.
சார், எனக்கு மணி ஆர்டர் வந்திருக்கா? இன்னிக்கு வரல அம்மா… நாளைக்கு எதாவது வரும் நம்பிக்கையோட இருங்கம்மா”

ரொம்பா யோசிக்காதிங்க, நான் போஸ்ட் மாஸ்டர் பத்தி தான் எழுதியிருக்கேன் கொஞ்ச நேரம் கிடைச்சா படிச்சு பாருங்க. அடர்ந்த காட்டில் விலங்குகளுக்கு மத்தியில் மலை கிராம மக்களுக்கு தபால் சேவை புரிந்த மாமனிதர் சிவன் இவருக்கு 67 வயதாகிறது.

தபால் துறையில் வேலை பார்த்து, தற்போது ஓய்வு பெற்ற இவர் கடந்த 34 ஆண்டுகளாக தினமும் 15 கிலோ மீட்டர் தூரம் வரை காட்டுக்குள் நடந்தே சென்று தபால், மற்றும் மணி ஆர்டர்களை வழங்கியவர்.

இவர் செல்லும் வழிகளில் விலங்குகளும், வலுக்கும் நீரோடைகளும், நீர் வீழ்ச்சிகளும் இருந்தபோதும், தனது பணியை அர்ப்பணிப்புடன் செய்து தற்போது தன் ஓட்டத்தை நிறுத்தியுள்ளார்.

ஒரு மனிதன் தன்னுடைய வேலையை எவ்வளவு நேசிக்கிறான் என்பதை அறியும்போது உடல் சிலிர்த்துப் போகிறது. பணியில் இருந்த 34 ஆண்டுகளில் ஒரு நாள்கூட விடுமுறை எடுக்காதவர் சிவன். விடுமுறை நாட்களிலும் பணிபுரிந்திருக்கிறார் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம். வாரம் ஆறு நாட்கள் தபால்களை வழங்குபவர் விடுமுறை நாளான ஞாயிறு அன்றும் தபால் மற்றும் மணி ஆர்டர்களை உரியவர்களிடம் வழங்கி இருக்கிறார். உண்மையில் அந்த நாளைத்தான் உன்னதமான நாளாக நினைக்கிறார் சிவன்.

மணி ஆர்டர் வந்த நபர் ஊரில் இல்லை என்றால், அதை 7 நாட்கள் மட்டுமே சிவன் கையில் வைத்திருக்கமுடியும். சம்மந்தப்பட்டவரிடம் 7 நாட்களுக்குள் கொடுக்கவில்லை என்றால் மீண்டும் அதை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

உண்மையில் அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. குரும்பபாடி பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கு மணி ஆர்டர் வந்திருக்கிறது. ஆனால், அவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று கோவை மருத்துவமனைக்கே சென்று சிவன் கொடுத்து வந்துள்ளார்.

அந்த பெண்ணை போல பலருக்கும் கோவை, மேட்டுப்பாளையம் என, சென்று தபால், மற்றும் மணி ஆர்டர்களை கொடுத்திருக்கிறார். ஏன்? அப்படி செய்கிறீர்கள் என, கேட்டால் “அவங்க அதை நம்பித்தான் இருப்பாங்க, அவங்க கஷ்டம் என்னன்னு எனக்கு தெரியும், அதைவிட அந்த பணத்தை திரும்ப அலுவலகத்திற்கு அனுப்பிட்டா திரும்ப போய் வாங்குறது கஷ்டம் அதனால் தான், நானே அவங்க இடத்துக்கு போய் அவங்ககிட்ட கொடுத்திருவேன்” என்றார் சிவன்.

15 கி.மீ பயணத்தில் 5 கி.மீ அடர்ந்த காட்டுக்குள் பயணம் செய்த சிவன், ‘அந்த மலைப்பகுதியில போகும் போது யானை எல்லாம் என்னை க்ராஸ் பண்ணிருக்கு, கரடி வெரைட்டிருக்கு, பாம்புகள் நிறைய போகும் வரும், அதுல ஒரு வாட்டி யானையிடம் சிக்கி இருக்கிறன். ஆனால், அதிர்ஷ்டவசமா எந்த அசம்பாவிதம் நடக்கல. அவங்களுக்கு வந்த லெட்டர், மணி ஆர்டரை எந்த வித பாதிப்பு இல்லாம, அவங்ககிட்ட போய் சேர்த்திருக்கேன். `இயற்கையை நான் நம்புகிறேன் இயற்கை என்னை எதுவும் செய்யாது’ என்கிறார்.

தான் எந்தப் பாதையில் செல்கிறேன் என்பதை அவரின் மனைவியை அழைத்து சென்று அறிமுகப்படுத்தி இருக்கிறார். “ஒரு வேளை நான் போகிற வழியில் எனக்கு ஏதாவது நடந்துவிட்டால் என்னை கண்டுபிடிக்க வேண்டும் என்பதால்தான் மனைவிக்கு பாதையை அறிமுகப்படுத்தினேன்” என்றார் சிவன்.

உங்களது 34 ஆண்டு தபால் பயணத்தில் மறக்க முடியாத சம்பவம் ஏதாவது இருக்கா சார் என்று கேட்டேன். நான், தபால் கொடுக்குற மக்கள் எல்லாருமே எழுத படிக்க தெரியாதவங்க, பழங்குடி மக்கள், அவங்க என்னை மட்டும்தான் நம்பியிருந்தாங்க. அந்த நம்பிக்கைல தான் நான் வேலை பார்த்தேன்.

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு பெண்ணிற்கு ஓய்வூதியம் வர வேண்டி இருந்தது. ரொம்ப நாளா வரவே இல்லை. தினமும் அந்த பெண் என்னிடம் “சார் மணி ஆர்டர் வந்துருக்கா” என கேட்டுக்கொண்டே இருப்பார். நானும் வரும் வரும் நம்புங்க என, சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆறு மாதங்கள் கழித்து அந்தப் பெண்ணிற்கு ஓய்வூதியம் வந்திருந்தது. ரொம்ப சந்தோஷமா அவங்களுக்கு கொடுக்க எடுத்துட்டுப்போனேன். ஆனால், அதை வாங்க அவங்க உயிரோட இல்லை. அது தான் என்னை ரொம்ப பாதித்த தருணம், அத பத்தி இப்ப நெனச்சாலும் அழுகை வந்துரும், ஒரு நாளைக்கு முன்னால வந்துருந்தா அவங்களும் சந்தோஷமா போயிருப்பாங்க, நானும் சந்தோஷமா இருந்திருப்பேன். என்னால அதை மறக்கவே முடியாது” என்று உருகினார்.

தபால்களை கொடுப்பது, அவற்றை படித்துக் காட்டுவது என, ஒரு நடமாடும் தபால் நிலையமாகவே சிவன் வாழ்ந்திருக்கிறார். சிவனின் அம்மா, அப்பா இறந்தபோதும் விடுமுறை எடுக்காமல் வேலைக்குச் சென்றவர் சிவன். “என்னை நம்பி நெறைய பேர் இருக்காங்க, நான் போகலன்னா அவங்க நம்பிக்கை வீண் போய் விடும் என்கிறார் சிவன்.

எந்தக் குடும்ப நிகழ்வுகளுக்கும் சிவன் செல்லததால் ஒட்டு மொத்த சொந்தங்களும் சிவனது குடும்பத்தை நிராகரித்துவிட்டார்கள். அது குறித்த கவலை சிவனுக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவரது மனைவி பூபதிக்கு இல்லாமல் இல்லை. `சிவன் இப்படி வேலையை நேசிக்கிறாரே உங்களுக்கு எதுவும் தோன்றவில்லையா?’ என அவரின் மனைவியிடம் கேட்டால், `ஆரம்பத்தில் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால், நாங்களே கஷ்டத்தில் இருக்கிறோம் என்பதால், அடுத்தவர்களின் கஷ்டம் என்பதை அறிவேன். அதனால் அவரை நான் தடுக்கவில்லை. அவரோடு நான் கோவை,மேட்டுப்பாளையம் எல்லாம் சென்றிருக்கிறேன்’ என்றார் பூபதி.

ஊரெல்லாம் பென்ஷன் கொண்டு சென்று கொடுத்தவருக்கு, பென்ஷன் இல்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. 65 வயதில் ஓய்வு பெற்றதால் அவருக்கு பென்ஷன் கிடைக்கவில்லை. ஒரு நாளைக்கு 5 மணி நேரம் , யாரும் செல்லாத காட்டுக்குள் பயணித்த சிவன் குடும்பம் இப்போது, அஞ்சலக சேமிப்பில் இருந்து வருகிற 1000 ரூபாய் வட்டி பணத்தில்தான் நகர்கிறது. பென்ஷன் இல்லை என்பது குறித்து அவர் கவலைப்படுவதில்லை. ஆனால், நாம் வருத்தப்பட வேண்டும்.