மூளைச் சாவடைந்த கல்லூரி மாணவனால் 8 பேருக்கு மறுவாழ்வு

சாலை விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, மூளை சாவு அடைந்த கல்லூரி மாணவரால் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டி, பொண்ணுவேல் நகரை சேர்ந்தவர் தினேஷ், இவருக்கு வயது 22. பெற்றோர் வெங்கடேஸ்வரன், சாந்தி அவர்களுடன் வசித்து வந்தார்

இவர் ஜூன் 18 ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் இரண்டு சக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது சத்தி சாலை, கணேசபுரம், அன்னுர் அருகில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் ஜூன் 20 ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் தினேஷின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது இருதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்பு, ஆகியவை தானமாக பெறப்பட்டது. ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், இருதயம், ஒரு சிறுநீரகம், கண்கள், தோல் மற்றும் எலும்பு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்

இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய தினேஷ் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.