கோவை – சார்ஜா இடையே ஏ321 ரக விமானம் இயக்கம்

கோவை சர்வதேச விமான நிலையம், கோவை உட்பட சுற்றுப்புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. கோவையில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர், டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், பூனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா நோய் தொற்று பரவலுக்கு முன்பு ஆண்டுதோறும் 30 லட்சம் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி வந்தனர். தினமும் 33 முதல் 36 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பின்னர் கோவை விமான நிலையத்தில் மெல்ல இயல்பு நிலை திரும்பியது. தினமும் இயக்கப்படும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரிவு இரண்டும் சேர்த்து 28 ஆக அதிகரித்தது.

இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் 168 பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய ஏர் பஸ் ஏ320 ரக விமானங்கள் மட்டுமே அதிகம் இயக்கப்பட்டு வந்தது. இதனால் பயணிகள் உரிய நேரத்தில் விமானம் கிடைக்காமல் அவதி அடைந்தனர்.

பயணிகளின் வேண்டுகோளை ஏற்று ஏ321 என்ற ரகத்தை சேர்ந்த பெரிய விமானத்தை ஏர் அரேபியா நிறுவனம் இந்த மாதம் முதல் தொடங்கியது. இந்த விமானம் வாரத்தில் 5 நாட்கள் கோவை சார்ஜா இடையே சேவையை வழங்கி வருகிறது.

இந்த விமானத்தில் 215 பயணிகள் பயணிக்க முடியும். இந்த விமானம் ஒவ்வொரு முறையும் வரும்போதும், செல்லும்போதும் அனைத்து இருக்கைகளும் நிரம்பி செல்கிறது.

இந்த விமானம் பெரிய விமானம் என்ற போதும் ‘வைட் பாடி’ என்று சொல்லக்கூடிய ரகத்தை சேர்ந்தது அல்ல. ‘நேரோ-பாடி’ என்று சொல்லக்கூடிய ரகத்தை சேர்ந்தது.

கோவை விமான நிலையத்தில் ஓடுதளம் நீளம் குறைவாக உள்ள காரணத்தால் வைட் பாடி ரகத்தை சேர்ந்த விமானங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது. 8 ஆயிரம் அடி நீளம் கொண்ட ஓடுதளத்தை 12 ஆயிரம் அடி நீளம் கொண்ட ஓடுதளமாக மாற்றினால் தான் வைட் பாடி என்று சொல்லக்கூடிய விமானத்தை இயக்க முடியும். இதனால் அதிகளவிலான பயணிகள் பயன் அடைவார்கள்.