ஒரே மேடையில் தம்முடன் விவாதிக்க அண்ணாமலை தயாரா?

 

-அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி கேள்வி

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தற்போதைய தி.மு.க.தலைமையிலான அரசு ரியல் எஸ்டேட் துறையில் நகர்ப் பகுதியில் 2.5 ஏக்கர் வரையிலும், ஊரகப் பகுதியில் 5 ஏக்கர் வரையிலும் மட்டுமே மனை வணிகம் செய்வதற்கு மாவட்ட அளவில் அனுமதி பெற முடியும் என்ற நிலையை மாற்றி, நகர்ப் பகுதியில் 5 ஏக்கர் வரையிலும், ஊரகப் பகுதியில் 10 ஏக்கர் வரையிலும் மனை வணிகம் செய்ய மாவட்ட அளவில் அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று, அறிவித்துள்ளது என்று தமிழக முதல்வருக்கும், வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

மனைப் பிரிவுகள் மற்றும் மனைகளுக்கு விரைவாக அனுமதி வழங்க ஒற்றைச் சாளரமுறை (Single Window System) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதால், கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் வளர்ச்சி நல்ல முன்னேற்றத்தை நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், அண்மையில் தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை ஜி.ஸ்கொயர் எனும் நிறுவனத்தின் மீது சரியான புரிதல் இல்லாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுவதாக கூறிய அவர், அண்ணாமலை ரியல் எஸ்டேட் துறையில் எந்த வித அனுபவம் இல்லாமல் பேசுவதாகவும், இது குறித்து ஒரே மேடையில் தம்முடன் விவாதிக்க அண்ணாமலை தயாரா என சவால் விட்டார்.

தொடர்ந்து பா.ஜ.க.தலைவரை விமர்சித்த அவர், திருவாரூரில் அமைய உள்ள மறைந்த தமிழக முதல்வர் கலைஞரின் அருங்காட்சியகம் மற்றும் சென்னையில் கட்ட உள்ள நினைவு இல்லம் ஆகியவற்றில் கூட தமிழக முதல்வர் அனைத்து விதிகளையும் கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய துணை தலைவர் செந்தில் குமார் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.