அரசியல் தலைவர்களை அரசியல் களத்தில் எதிர்கொள்ளுங்கள்! – பாஜக அரசிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியதை, பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இயக்குனர்களாக உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனம் மூலம், சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக கோரி இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதில், சோனியா காந்தி தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மட்டும் கடந்த 2 தினங்களாக அமலாக்கத்துறை முன்பு விசாரனைக்கு ஆஜராகி உள்ளார். முதல் நாள் நடைபெற்ற விசராணை 9 மணி நேரத்துக்கு மேலாகவும், இரண்டாவது நாளில் சுமார் 10 மணி நேரமும் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்றும் 3வது நாளாக ஆஜராக ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை பழிவாங்கும் எண்ணத்தோடு பா.ஜ.க. அரசு அமலாக்கத் துறையைப் பயன்படுத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளார்.

மக்களின் அன்றாட அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாத பாஜக அரசு, இது போன்ற அரசியல் திசை திருப்பும் நாடகத்தின் வாயிலாக தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்க்கிறது. அரசியல் தலைவர்களை அரசியல் களத்தில் எதிர்கொள்ள வேண்டுமே அல்லாமல், அமலாக்கத்துறையை ஏவி அல்ல என தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.