அதிமுகவிற்கு ஒற்றைத்தலைமை யார்?

ஒற்றைத் தலைமைக்கு பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆதரவாக  இருப்பதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம், செயற்குழுக் கூட்டம் வரும் மாதம் 23ம் தேதி நடைபெறவுள்ளது. அ.தி.மு.க பொதுக் குழு கூட்டம் நடைபெறுவதால் அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.  சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அ.தி.மு.கவை விரைவில் மீட்டெடுப்பேன் என்று சசிகலா தொடர்ந்து கூறிவருகிறார். அவ்வப்போது, பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று தொண்டர்களையும் சந்தித்து வருகிறார்.

சசிகலாவை அ.தி.மு.கவில் இணைக்க வேண்டும் என்ற குரல்களும் அடிக்கடி எழுந்துவருகின்றன. இதற்கிடையில், பா.ஜ.கவின் செயல்பாடு குறித்து அ.தி.மு.க மூத்த தலைவர் பொன்னையன் பேசிய பேச்சுகள் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தன.

இந்த  பரபரப்பான சூழலில் பொதுக் குழுக் கூட்டம் குறித்து விவாதிப்பதற்கு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.கவின் மூத்த தலைவருமான ஜெயக்குமார் கூறியதாவது, ‘அ.தி.மு.கவிற்கு ஒற்றைத் தலைமையை நியமிப்பது குறித்து ஆலோசனை செய்தோம். இன்று கருத்து பரிமாற்றம் மட்டும்தான் நடைபெற்றது. கட்சிதான் இறுதி முடிவெடுக்கும். அது சஸ்பென்ஸ் ஆக இருக்கும்.  பெரும்பாலானவர்கள் ஒற்றைத்தலைமை தேவை என, வலியுறுத்தியுள்ளனர். யார் தலைமையில் ஒற்றைத் தலைமை என குறிப்பிட்டு விவாதிக்கப்படவில்லை. அது யார் என்பது இன்னும் முடிவெடுக்கவில்லை. கட்சி முடிவு செய்யும்.

கழக நிர்வாகிகள், பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் ஒற்றை தலைமைத்தான் தேவை என, ஆதரவு தெரிவித்துள்ளனர். சசிகலாவுக்கும் கட்சிக்கு எந்த சம்மந்தமும் இல்லை. சசிகலா குறித்து எதற்காக கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். அவர் குறித்து பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. இருபெரும் தலைவர்களின் நல்லாட்சியில் அ.தி.மு.க வலுவாக உள்ளது. வெற்றி, தோல்வி என்பது நாணயத்தின் இரு பக்கம். மீண்டும் அம்மாவின் ஆட்சி மீண்டும் மலரும்’ என்று கூறினார்.