எண்ணி ஏழே நாட்களில் அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வாரத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும்  என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஜூன் 7ம் தேதி முதல் 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டிருந்தது. (No Work No Pay) என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை  ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வாரத்துக்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என, தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடை ஊழியர்கள், அகவிலைப் படி உயர்வு குறித்து  பணியாளர்களின் சங்கம் சார்பில் 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் இடையூறு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப் படி உயர்வு குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகின்றது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என, அரசு உறுதியாக உள்ளது.

எனவே, நியாய விலைக் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் தங்களது கோரிக்கை குறித்து கவலைப்படாமல் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.