ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்திய சமூக அறிவியல் கவுன்சில் நிதியுதவியுடன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பன்னாட்டு வணிகத் துறை சார்பில், ‘இளம் தலைமுறையினருக்கு தகவல் தொடர்பு கருவிகளைப் பயன்படுத்தி கற்பிக்கும் வகையில், ஆசிரியர்கள் தங்களை வடிவமைத்து தரத்தை மேம்படுத்திக் கொள்ளுதல்’ என்ற தலைப்பில், 2 நாள் தேசிய அளவிலான கருத்தரங்கத்தின் முதல் நாள் (17.03.2022) தொடங்கி நடைபெற்றது.

இதன் தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்து, கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.

பன்னாட்டு வணிகத் துறைத்தலைவர் பர்வீன்பானு வரவேற்றுப் பேசினார்.
கோவை வருமானவரித் துறை இணை ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஆர்.எஸ். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கருத்தரங்க மலர் வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர், ‘பொது நிர்வாகத்தில் பயிற்சி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிப்பது சிறப்புமிக்கது. பன்னாட்டு வணிகத்துறை வெளிநாட்டு வர்த்தகம், வருமானவரி, வர்த்தகம் என பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. இவை குறித்து ஆழமாக பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம்’ என்றார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.