பன்னாட்டு அரிமா சங்கத்தின் பவளம் மண்டல மாநாடு

பன்னாட்டு அரிமா சங்கம் 324-C கீழ் வரும் கோயமுத்தூர் ராம்நகர், கோயமுத்தூர் இமயம், குறிஞ்சி, ஸ்மார்ட் சிட்டி என 16 அரிமா சங்கங்கள் உள்ளடக்கிய பவளம் மண்டல மாநாடு கோவை சின்னியம்பாளையம் பகுதியில் கோகுலம் பார்க் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

செல்வி 2022 எனும் தலைப்பில் நடைபெற்ற இதில், மண்டல தலைவர் அரிமா நாராயணசாமி தலைமை தாங்கினார். கோயமுத்தூர் சிகரம் அரிமா சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன் மண்டல கூட்டத்திற்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.

மண்டல மாநாட்டை மாவட்ட ஆளுநர் நடராஜன் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கவுன்சில் தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார். தொடர்ந்து விழாவில் கடந்த ஆண்டுகளில் சமுதாய சேவை பணிகள், பசிப்பிணி போக்கும் திட்டத்தில் சிறப்பாகச் செயல் பட்ட அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

முன்னதாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவ உதவியும், அரசூர் ஊராட்சி தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு கல்வி உதவி தொகையும், சமூக நல மேம்பாட்டு நிதியாக பேரூர் அன்பு இல்லத்திற்கு நிதி உதவியும் வழங்கப்பட்டது. சேவை திட்டத்தை ஒருங்கிணைப்பாளர் நித்யானந்தம் துவக்கி வைத்தார்.

இதில் ஜி.எல்.டி.ஒருங்கிணைப்பாளர் மதனகோபால், முதல் நிலை ஆளுநர் ராம்குமார், இரண்டாம் நிலை ஆளுநர் ஜெயசேகரன், ஐ.எம்.ஏ.மாநில தலைவர் டாக்டர் பழனிசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் அரிமா செந்தில் குமார் மற்றும் முன்னாள் ஆளுநர்கள் சாரதாமணி பழனிச்சாமி, காளி சாமி, ஆறுமுகம் மணி, சண்முகம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ரவிச்சந்திரன், ஜோசப் உட்பட பல்வேறு அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.