கோவையில் முதியவர்களுக்காக வீடு தேடி வருகிறது தடுப்பூசி

கோவை மாநகராட்சியில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி மற்றும் கொரோனா இரண்டு தவணைகள் வீடு தேடி வந்து செலுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அதாவது 39 வாரங்கள் கடந்த நபர்கள் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை (Precautionary Booster) செலுத்திக் கொள்ளதகுதியுடையவர்கள்.

இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்த கோவை மாநகராட்சியின் சார்பில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் 0422-2302323 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய விவரங்களை பதிவு செய்தால் அவர்களின் இல்லங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.

மேலும், 60 வயதை கடந்த முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத நபர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்த வேண்டிய நாட்களை கடந்த நபர்களும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்தால் அவர்களுக்கும் இல்லங்களிலேயே கோவிட் தடுப்பூசி செலுத்தப்படும்.

இவ்வாறு கோவை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.