கப்பலில் நடைபெறும் பேஷன் ஷோ: கோவையில் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி

மூன்று நாட்கள் கப்பலில் நடைபெற உள்ள N 8 மிஸ்டர் இந்தியா, மிஸ் இந்தியா மற்றும் மிஸஸ் இந்தியா அழகு போட்டிகளுக்கான போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

இந்தியாவில் முதன்முறையாக கப்பலில் N8 மிஸ்டர் இந்தியா, மிஸ் இந்தியா மற்றும் மிஸஸ் இந்தியா என்ற தலைப்புக்கான அழகுப் போட்டி வரும் மே மாதம் நடைபெற உள்ளது. மே 2 முதல் மே 4 வரை மும்பையில் இருந்து கொச்சின் வரும் கார்டெலியா குரூஸ் கப்பலில் நடைபெற உள்ள இப்போட்டியில் இதில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 150 ஆண் மற்றும் பெண் மாடல்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான போஸ்டர் வெளியீட்டு விழா கோவை அவினாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ரொட்டேரியின் R.P. ராஜ், வெங்கடேஷ், நடிகர் விக்னேஷ் மற்றும் N8 ஃபேஷன் மற்றும் மீடியா இயக்குநர்கள் சண்முகம், சுப்பிரமணியன், ஜிக்கு சாக்கோ, ஜின்சி சாக்கோ ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், இந்தியாவிலேயே முதன் முறையாக நகரும் கப்பலில் இது போன்று பிரம்மாண்ட பேஷன் ஷோ நடைபெற உள்ளதாகவும் குறிப்பாக மூன்று நாட்கள் முழுவதும் கப்பலிலேயே நடைபெறுவதாகவும் கூறினர்.

இறுதியாக கொச்சினில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஹெலிகாப்டரில் அழைத்து சென்று வெற்றி மகுடம் சூட்ட உள்ளதாக தெரிவித்தனர். மேற்கத்திய நாடுகளில் நடைபெறுவது போன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த அழகு போட்டிக்கான முன்பதிவு துவங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.