கோவையில் வனத்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்ட சிறுத்தை புலியை இரவு நேர கேமரா கொண்டு கண்காணிக்கப்பட்ட நிலையில், சிறுத்தை புலி குடோனுக்குள் நடமாடும் வீடியோவை வனத்துறை வெளியிட்டுள்ளது.
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம், மயில்கல், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நடமாடி வந்த சிறுத்தை புலி நேற்று முன் தினம் பி.கே புதூர் பகுதியில் உள்ள பழைய குடோனில் புகுந்தது. தொடர்ந்து வனத்துறை அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுத்தை புலியை பிடிப்பதற்காக குடோன் அருகே 2 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வலைவிரித்தும் பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுத்தை புலியை பொறுமையாக காத்திருந்து பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ள நிலையில், அதன் நடமாட்டத்தை கண்காணிக்க டிரோன் கேமரா பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரத்தில் சாதாரண கேமராக்களால் சிறுத்தை புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க நேற்று இரவு, இரவு நேரத்தில் பயன்படுத்தப்படும் காமிராவைக் கொண்டு சிறுத்தை புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்தனர்.
அப்போது சிறுத்தை புலி குடோனுக்குள் நடமாடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இந்த வீடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.