குடியரசு தின அணிவகுப்பை அரசியல் ரீதியாக அணுக கூடாது – கிருஷ்ணசாமி

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் தமிழக அணி வகுப்பு வாகனங்கள் தேர்வாகததை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது: நம்மை நாமே ஆண்டு கொள்ளும் வகையில் அரசியல் சாசனம் இயற்றப்பட்ட குடியரசு தினத்தை நினைவு கூறும் விதமாக ஆண்டு தோறும் ஜனவரி 26ல் டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.

இதில் நாட்டின் ராணுவ பலம், கலாச்சாரம், பாரம்பரியம், தியாகிகளின் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் அணிவகுப்பு வாகனங்கள் இடம் பெறுகின்றன.

இந்தாண்டு தமிழக சுதந்திர போராட்ட தியாகிகளின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுதந்திர போராட்ட வீரர்களும் பெருமை படுத்தப்பட வேண்டியவர்கள் தான்.

இந்த அணிவகுப்பு வாகனத்தில் இடம் பெறும் கருத்துருக்கள் குறித்து டெல்லியில் உள்ள கமிட்டி ஆய்வு செய்யும். இதில் தமிழக அரசு எத்தகையை கருப்பொருளை வைத்தது என்பதை வெளிப்படையாக கூற வேண்டும்.

அணிவகுப்புக்கான கருப்பொருளை தமிழக அரசு அதிகாரிகள் முறையாக சமர்ப்பித்திருந்தால் தமிழக அரசு சார்பில் அனுப்பப்படும் அணிவகுப்பு வாகனம் தேர்வாகி இருக்கும். அரசு அதிகாரிகள் இன்னும் சிரத்தை எடுத்து பணியாற்ற வேண்டும். இந்த விஷயதை யாரும் அரசியல் ரீதியாக அணுக கூடாது. இந்த ஆண்டு இல்லை என்றால் அடுத்த ஆண்டு அணிவகுப்பு பேரணியில் இடம்பெறலாம். இதனை மொழி, இன ரீதியாக பார்க்கக் கூடாது. யாரும் பிரிவினை பேசக்கூடாது.

தமிழக அரசு மீண்டும் மணல் குவாரிகளை தொடங்க முடிவு செய்துள்ளது. அவ்வாறு தொடங்கினால் தமிழகத்தில் இருந்து மணல் ஆந்திரா, கேரளா மற்றும் மாலத்தீவுக்கு கடத்தப்படும். இதனால் ஆறுகளில் வறட்சி ஏற்படும்.

இது கொள்ளைக்கு தான் வழிவகுக்கும். இந்த திட்டம் தமிழகத்தில் சூரையாடுவதற்கு சமமாக உள்ளது. பல இடங்களில் ஆற்று மணல் அல்லாமல் வீடு கட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த முறையை நாமும் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறினார்.