கோவையில் சிறுத்தை புலி கூண்டில் சிக்கும் வரை காத்திருக்க வனத்துறை முடிவு

கோவையில் சுற்றித்திரியும் சிறுத்தை புலியை வனத்துறையினர் சுற்றி வளைத்த நிலையில் சிறுத்தை புலி தானாக கூண்டில் சிக்கும் வரை வரை காத்திருக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம், மயில்கல், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை புலி நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாக ஏற்கனவே புகார் இருந்தது. இதன் தொடர்ச்சியாக சிறுத்தையால் நாய்கள் தாக்கப்பட்டு இருந்தது.

வனத்துறையினர் சிறுத்தை புலியை பிடிக்கும் முயற்சியில் ஏற்கனவே ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் குனியமுத்தூர் பி.கே புதூர் பகுதியில் உள்ள பழைய குடோனில் நேற்று சிறுத்தை புலியை கண்டதாக அப்பகுதியில் உள்ள வட மாநிலத்தைச் சேர்ந்த குடோன் ஊழியர் குடோன் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குடோன் ஊழியர்கள் சிறுத்தை புலி இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள குடோனை மூடி சென்றனர்.

குனியமுத்தூர் காவல்துறை மூலம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புப் பணித் துறையினர் சிறுத்தை புலியை கண்காணித்து வருகின்றனர்.

அதேபோல சிறுத்தை புலியை பிடிப்பதற்காக குடோன் அருகே 2 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வலைவிரித்தும் பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்ட வனத்துறை அலுவலர் அசோக்குமார் தலைமையில் சிறுத்தை புலியை பிடிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல அதனை கட்டுப்படுத்தி பிடிக்க ஊசி செலுத்தலாமா என்பது குறித்தும் மருத்துவ குழுவினர்கள் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.

இந்த சூழலில் சிறுத்தை புலியை பொறுமையாக காத்திருந்து பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி சிறுத்தை தானாக கூண்டில் சிக்கும் வரை காத்திருக்கிறோம் என்று வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் தெரிவித்துள்ளார்.