பொங்கல் பரிசுப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என கோவை ஆட்சியர் ஆய்வு

கோவையில் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கோவையில் 10.78 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரேசன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டு, இந்த பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள தெப்பக்குளம் வீதியில், ராமலிங்க சவுடேஸ்வரி கூட்டுறவு பண்டக சாலையில் மாவட்ட ஆட்சியர் ஜி.ச.சமீரன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அரசு அறிவித்த 21 பொருட்களும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறதா என்பதையும், பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்களிடம், பொருட்களின் தரம் குறித்து அவர் கேட்டறிந்தார். தரமான பொருட்களை வழங்குவதோடு, அனைத்து பொருட்களும் பொதுமக்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.