யானை சாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்: வன உயிரின ஆர்வலர்கள் அதிர்ச்சி

கோவை மருதமலை பகுதியில் யானை சாணத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டடது வன உயிரின ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்கள் ஏராளமான யானைகளின் வாழ்விடமாக உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடிச் செல்லும் யானைகள் அடிக்கடி வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

உணவுக்காக வனத்தை விட்டு வெளியே வரும் யானைகள், குப்பை மேடுகளில் கொட்டப்படும் காய்கறிக் கழிவுகளை உட்கொள்கின்றன. அப்போது பிளாஸ்டிக் கவர்களையும் சேர்த்து உட்கொள்வதால் யானைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதோடு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது.

இந்நிலையில் மருதமலை மலைக்கோயிலுக்கு செல்லும் பாதையில் கிடந்த யானை சாணத்தை வன உயிரின ஆர்வலரான முருகானந்தம் என்பவர் ஆய்வு செய்தபோது அதில், பிளாஸ்டிக் கவர்கள், முகக் கவசம், நாப்கின் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து முருகானந்தம் பேசும்போது, மருதமலைக்கு அருகிலுள்ள சோமயம்பாளையம் கிராமத்தில் எங்களது எதிர்ப்பை மீறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை தரப்பிலிருந்தும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பகுதியில் இருந்து குப்பை கிடங்கை அகற்ற முடியவில்லை. வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் 5 யானைகள் இந்த குப்பை மேடு உள்ள பகுதிக்கு அவ்வப்போது வருகின்றன. இங்கு யானைகள் வரும்போது அவற்றை கண்காணித்து அங்கிருந்து விரட்டி வருகிறோம். தொடர்ச்சியாக யானைகள் பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் போது அவை உயிரிழக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனை துறை சார்ந்த அதிகாரிகள் கவனத்தில் கொண்டு யானைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.