வார்டு மறுவரையறை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம்

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளின் வார்டு மறுவரையறை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறுவரையறை ஆணைய தலைவர் பழனிக்குமார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோருடன், ஆணையத்தின் செயலர் சுந்தரவல்லி, தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

கோவையில் காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, கூடலூர் ஆகிய 4 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 18 வார்டுகள் 24 வார்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட திருமுருகன்பூண்டி நகராட்சி, சேலத்தில் தாரமங்கலம், இடங்கனசாலை ஆகிய 3 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு வார்டு எண்ணிக்கை 15லிருந்து 27 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வார்டு மறுவரையின் போது ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக ஆணையத்திடம் மனு அளித்தனர்.