அதிமுக பொன்விழா: முன்னாள் அதிமுக தலைவர்களுக்கு மாலை அணிவித்து கொண்டாட்டம்

அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு கோவையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியினர் இனிப்புகள் வழங்கி ஞாயிற்றுக் கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட அதிமுக சார்பில் அதிமுகவின் 50வது ஆண்டு பொன் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனன் எம்எல்ஏ தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் இருந்து அதிமுகவினர் ஊர்வலமாக சென்று அவிநாசி சாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி கட்சி கொடியேற்றினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும், சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஆர்.ஜெயராம், புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.