கோவையில் விஜயபாஸ்கர் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

கோவையில் விஜயபாஸ்கருக்கு சொந்தமாக உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்

அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை காவல்நிலையத்தில் விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதன்மூலமாக, சொத்துக் குவிப்புக்காக வழக்கை சந்திக்கும் 4வது முன்னாள் அமைச்சராகிறார் இவர். முன்னதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகிய முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பாய்ந்தது.

லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீடு உள்ளிட்ட 43 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை ராமநாதபுரம் – நஞ்சுண்டாபுரம் சாலை எஸ்.என்.வி கார்டன் பகுதியில் உள்ள விஜயபாஸ்கர் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.