கே.ஜி.மருத்துவமனையில் ‘சிறார் ‘ இருதய பாதுகாப்பு திட்டம் தொடக்கம்

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியம் கோவை, கே.ஜி.மருத்துவமனையில், ‘சிறார் இருதய பாதுகாப்பு திட்டத்தை புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறவி இருதய நோயுடன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர், பிறவி இருதயக்கோளாறு காரணமாக இறக்கின்றனர். இக்குறைபாடுகளில் இருதய சுவர்களில் துளைகள், குறுகிய வால்வுகள் ஆகியவை அடங்கும். இன்றைய சூழலில் 4 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலுக்கு ஆரோக்கியமான விளையாட்டுகள் இன்மை, தவறான உணவு பழக்கம் உள்ளிட்டவையே இதற்கு காரணமாக உள்ளது. இந்நிலையில், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை செய்வதன் மூலம் முன்கூட்டியே சிகிச்சையளித்து காப்பற்றலாம்.

அந்தவகையில், கே.ஜி.அறக்கட்டளை சார்பில் பள்ளி பயிலும் குழந்தைகளுக்கு இலவசமாக இருதய பரிசோதனை மேற்கொண்டு, அதன் மூலம் இருதய நோய் உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு அரசு காப்பீடு அல்லது தனியார் இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் இலவசமாக சிகிச்சை அளிக்கவுள்ளனர்.

அதன்படி, கோவை கே.ஜி. மருத்துவமனையில் ‘இளம் சிறார் இருதய பாதுகாப்பு திட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஜார்கண்ட், அசாம் மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகள் 10 பேருக்கு இலவசமாக இருதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த பத்து ஆண்டுகளில் சிறந்த இந்தியர்களுக்கு கே.ஜி.மருத்துவமனை சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் சுப்பிரமணியத்திற்கு ‘டைனமிக் இந்தியன் ஆப் தி டெக்கடு’ என்ற விருதினையும், நினைவு பரிசுகளையும் கே.ஜி.மருத்துவமனை நிறுவன தலைவர் பக்தவத்சலம் வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.