மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு ஆட்சியர் அணிவித்த காலணியை கொடுக்காமல் இழுத்தடிப்பு

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு ஆட்சியர் அணிவித்த காலணியை கொடுக்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதால் சிறுவனின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.

கோவை போத்தனூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான வேல்முருகன். அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த இரு மாதங்களுக்கு முன் தமிழக அரசின் இலவச வீடு வேண்டி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க குடும்பத்துடன் வந்திருந்தார். அப்போது வேல்முருகனின் மாற்றுத்திறனாளியான மகனுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட காலணிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் சிறுவனுக்கு அணிவித்து மகிழ்ந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்நிலையில் ஆட்சியர் அணிவித்த நிகழ்வு முடிந்ததும், காலணியை பழுதுபார்க்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள்  நலத்துறை அதிகாரிகள் திரும்ப பெற்று கொண்டதாகவும், அதிகாரிகளிடம் கேட்டபோதும், காலணியை கொடுக்காமல் இரண்டு மாதமாக இழுத்தடித்து வருவதாக வேதனை தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளர் நலத்துறை அதிகாரிகளின் இந்த செயலில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மகனுக்கு காலணிகளை பெற்று தர வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.