சமூக நீதிக்கு பாடுபட்டவர்களை சிறப்பிக்கும் ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு பின்வருமாறு:
சமூக நீதிக்கு பாடுபட்டவர்களை சிறப்பிக்கும் ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” கடந்த 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் தமிழக முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.
2021ம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்கப் பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு, பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விண்ணப்பிக்கலாம்.
தங்களது விண்ணப்பம், தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
2021ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31.10.2021 ஆகும். மேலும் விவரங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தொலைபேசி எண் – 0422 230040.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.