அண்ணா பல்கலை ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி நியமனம் – சபாநாயகர் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம், விதி 110ன் கீழ் முதல்வரின் அறிவிப்புகள், மசோதாக்கள் நிறைவேற்றம் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று (செப்.13) நடைபெற்றது. இதில், நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதாவை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து தாக்கல் செய்தார்.

இந்நிலையில், திமுக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.

அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின், மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் சிந்தனைச் செல்வனும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஈஸ்வரன், கணேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பேரவைத் தலைவர் அறிவித்தார்.