சிதம்பரனார் இழுத்த செக்கிற்கு அமைச்சர் மலர் தூவி மரியாதை

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 150வது பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை (9.05.2021)கொண்டாடப்படுகிறது. பலரும் பல இடங்களில் அவரது புகைப்படத்திற்கும் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிதம்பரனார் கோவை மத்திய சிறையில் இருக்கும் போது அவர் இழுத்த செக்கிற்கும் அவரது திருவுருவ படத்திற்கும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வ.உ.சிதம்பரனாரின் புகைப்பட கண்காட்சி பேருந்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இப்பேருந்தானது கோவையில் உள்ள அரசு பள்ளி கல்லூரிகளுக்கு இனி வரும் நாட்களில் செல்ல இருக்கிறது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும் என்று முதல்வர் கூறியதன் அடிப்படையில் வ.உ.சிதம்பரனாரின் அருமைகளை போற்றுகின்ற வகையில் ஒரு வருடத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

கோவையில் அவருக்கு முழு உருவ சிலை வைக்கப்பட உள்ளது என்றும் பல்வேறு இடங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவரது வாழ்க்கை வரலாற்றை அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொள்கின்ற வகையில் கண்காட்சி பேருந்து தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நஞ்சப்பா சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் மற்றும் கோவையில் ஏதாவது ஒரு மேம்பாலத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை சிதம்பரனார் பேரவை அமைப்பினர் வைத்துள்ளதாகவும் அதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் கூறினார்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தவே சனி, ஞாயிறுகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சமீரன், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், சிறைக் கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன், திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.