பாங்க் ஆப் இந்தியா சார்பில், வெள்ளலூர் செந்தூர் மகாலில் டிஜிட்டல் கிராமம் அறிவிக்கும் விழா அண்மையில் நடைபெற்றது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், எம்எல்ஏ எட்டிமடை சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வங்கியின் செயல் இயக்குநர் நீலம் தாமோதரன் பேசுகையில்:
வங்கியின் சேவையை நவீனப்படுத்துவதோடு சமுதாய, அக்கறையோடு பாங்க் ஆப் இந்தியா கிராமங்களின் வளர்ச்சியிலும், அர்ப்பணித்து வருகிறது. கிராமங்கள் மேம்பாடு அடையும்போது, நகரமும், மாநிலமும் வளர்ச்சி பெறும். அந்த நோக்கில் இந்த வெள்ளலூர் கிராமத்தை டிஜிட்டல் கிராமமாக அறிவித்துள்ளோம். அதற்கான நவீன வசதிகள் அனைத்தும் இந்த கிராமத்தில் ஏற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் வங்கிக்கு செல்லாமலே கணினி, மொபைல் மூலமும் வங்கியின் சேவைகளை அறிந்து கொள்ளலாம். கிராமம் முழுவதும் வைபை, வசதியை படிப்படியாக பல்வேறு கிராமங்களுக்கு செயல்படுத்த உள்ளோம் என்று கூறினார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்: தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்வதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. வங்கி சேவை மட்டும் அளிக்கும் வங்கிகள் கிராமப்புற மேம்பாடுகளுக்கும், தங்களை ஈடுபடுத்திக் கொள்வது வரவேற்கத்தக்கது. சாலைகள்,போக்குவரத்து, குடிநீர் கழிப்பிட வசதிகள் செய்து தரும் தமிழக அரசு தனியார் அமைப்புகள் நவீன வசதிகளை கிராமப்புறங்களுக்கு கொண்டு வரும் பொழுது மேலும் கிராமங்கள் மேம்பாடு அடையும் என்று கூறினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் தேசிய வங்கி குழுமத்தின் பொதுமேலாளர் ஆர்.கே.மித்ரா, மண்டல மேலாளர் ரவீந்திரன், முதுநிலை கிளை மேலாளர் சிட்டிபாபு மற்றும் வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.