அரசு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு துவக்கம்

கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 23 இளநிலை படிப்புகள், 21 முதுகலை படிப்பு மற்றும் 16 ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று துவங்கி உள்ளது. முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகள், என்சிசி மாணவர்கள், விளையாட்டு பிரிவு, ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. இதர மாணவர்களுக்கு நாளை துவங்குகிறது. இதில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து கல்லூரியின் முதல்வர் சித்ரா பேசுகையில், இளங்கலை படிப்பில் 1,443 இடங்களுக்கு மொத்தம் 19,053 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதல் நாளான இன்று முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள்,  மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் மற்றும் என்.சி.சி மாணவர்களுக்கு கலந்தாய்வு துவங்கியுள்ளதாக தெரிவித்தார். நாளை காமர்ஸ் படிப்பிற்கும் வரும் 31ம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், கணிதம், வேதியல் உள்ளிட்ட படிப்புகளுக்கும், 2ம் தேதி புள்ளியியல் புவியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கும், 4ஆம் தேதி பொருளாதாரம், பொதுப்பணி நிர்வாகம் படிப்புகளுக்கும், 7ம் தேதி வரலாறு தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளதாக கூறினார்.

கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 11, 12ஆம் வகுப்புக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், கலந்தாய்வுக்கான கடிதம் மற்றும் புகைப்படங்களுடன் வரவேண்டுமென கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, கல்லூரி நுழைவு வாயிலில் கிருமி நாசிகள் கொண்டு கையை கழுவிய பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.