சர்வதேச விண்கற்கள் கண்டறிதல் ஆய்விற்கு எஸ்.என்.எம்.வி கல்லூரி மாணவர்கள் தேர்வு..!

சர்வதேச விண்கற்கள் கண்டறிதல் (Asteroid Search Campaign ) ஆய்விற்கு கோவை எஸ்.என்.எம்.வி கல்லூரி இயற்பியல் துறை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச விண்வெளி ஆய்வு அமைப்பானது (INTERNATIONAL ASTRONOMICAL SEARCH COLLABORATION – IASC) புதிய விண்கற்களை கண்டறியும் (Asteroid Search Campaign) ஆய்வினை நடத்தி வருகிறது.

இவ்வாய்வில் பல்வேறு நாடுகளை சார்ந்த விண்வெளி ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் பங்கேற்று புதிய விண்கற்களை கண்டறிந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஆய்விற்கு இந்தியாவில் இருந்து 20 ஆய்வு குழுக்கள் தேர்வாகி உள்ளன. தமிழ்நாட்டில் இருந்து எஸ்.என்.எம்.வி கல்லூரி இயற்பியல் துறை மாணவர்கள் ஜி.கிருத்திகா கிருஷ்ணன், ஆர்.மோனிஷ் குமார், பி.அபிநயா, டி.காயத்திரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இக்குழுவை ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷனின் (Open Space Foundation) தலைவர் சுரேந்தர் பொன்னழகர் ஒருங்கிணைக்கிறார்.

தமிழ்நாட்டிலிருந்து இவ்வாண்டில் தேர்வு செய்யப்பட ஒரே ஆய்வுக்குழு என்ற பெருமையை எஸ்.என்.எம்.வி .கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை பெறுகிறது.

இத்திட்டம் அமெரிக்க நாட்டின் Institute for Astronomy- Hawaii ல் உள்ள பான்-ஸ்டார்ஸ்-01 (Pan-STARRS) என்ற தொலைநோக்கியின் மூலம் ஆண்டு முழுவதும் இரவு நேரங்களில் வானில் படங்களை எடுத்துவருகிறது.

இவ்விண்கற்கள் கண்டறிதல் குறித்த ஆய்வுத்திட்டம் அமெரிக்க நாட்டின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் உதவியோடு சிடிசன் சயின்டிஸ்ட் ரிசர்ச் (CITIZEN SCIENTIST RESEARCH) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது . இப்படி எடுக்கப்படும் படங்களை கொண்டு ஒரு பிரத்யேக மென்பொருள் உதவியுடன் விண்கற்களை கண்டறிவது இவ்வாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் பணியாகும்.

இவ்வாய்விற்குத் தேர்வான மாணவர்களைக் கல்லூரியின் தலைவர் ரமேஷ் சி பாஃப்னா, துணைத்தலைவர் மஹாவீர் போத்ரா, செயலர் சுனில்குமார் நஹாடா, இணைச்செயலர் நிஷாந்த் ஜெயின், முதல்வர் சுப்பிரமணி, மொழிப்புலத்தலைவர் மஞ்சுளா சுரேஷ், இயற்பியல் துறைத்தலைவர் லெனின்பாரதி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.