“அரசியலுக்கு வரலாமா வேண்டாமா”:ரஜினி மீண்டும் ஆலோசனை

அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவுள்ளேன் என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். இன்று கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

முன்னதாக தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “நான் அரசியலுக்கு வரவில்லையென்று சொன்ன பிறகு மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்களை சந்திக்கவில்லை. அண்ணாத்த படப்பிடிப்பு, தேர்தல், கொரோனா இரண்டாவது அலை, உடல்நலம் சம்பந்தமாக அமெரிக்கா சென்றது உள்ளிட்ட காரணங்களால் இந்த சந்திப்பு தள்ளிப்போனது.

இந்த சூழலில், தற்போது மக்கள் மன்றத்தைத் தொடரலாமா? அதனுடைய பணி என்ன? உள்ளிட்ட கேள்விகள் தொடர்ந்து மேலெழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நானும் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பது குறித்தும் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் கடந்த ஆண்டு கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என அறிக்கை மூலம் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்கப்படும் என கருத்து தெரிவித்துள்ளார். அதனால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.