கோவையில் மீண்டும் தடுப்பூசி : அதிகாலை 3 மணிக்கே காத்திருக்கும் மக்கள்

கோவையில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் கடந்த சில தினங்களாக தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, துடியலூரை அடுத்த அப்ப நாயக்கன்பாளையம் நடுநிலைப் பள்ளியில் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டிருந்தது. 300 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை 3 மணி முதலே மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள குவிந்தனர். மேலும் (ஞாயிற்று கிழமை) நேற்று இரவில் இருந்தே மக்கள் காத்திருந்தனர்.

சுமார் 800 பேர் வரை வரிசையில் நின்றிருந்த போது, அங்கு வந்த சுகாதாரத்துறையினர் சமூக இடைவெளி இல்லாமல் அருகருகே நின்று இருந்தவர்களை ஒழுங்குபடுத்த முற்பட்டனர். மேலும், ஆதார் அட்டை மற்றும் அதன் நகல் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என கூறியதால் “அதிகாலை 4 மணிக்கு எங்கே சென்று ஜெராக்ஸ் எடுப்பது” எனக் கூறி பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

மேலும், டோக்கன் கொடுக்கும் முறையில் தில்லுமுல்லுகள் நடப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.