சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமைக்குழு அமைப்பு

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலையை பாதுகாக்க மாநில அளவில் பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த பசுமைக்குழுவானது சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோர் தலைமையில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் தொழில்துறை, ஊரகவளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 9 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராகக் கொண்டு 6 உறுப்பினர்களைக் கொண்டு மாவட்ட அளவிலான பசுமைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது மரம் வளத்தை ஊக்குவிக்கும் என்றும் பொது இடங்களில் மரங்களைப் பாதுகாக்கவும், இக்கட்டான நேரத்தில் மரங்களை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை உரிய ஆலோசனைகளை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வனப்பகுதியில் அதிகளவில் மரங்களை வளர்க்க இந்த குழு திட்டங்களை வகுக்கும் என்றும் தமிழ்நாடு அரசு அரசாணையில் தெரிவிக்கப்படுள்ளது.