மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் கொரோனா தொற்றால் மூடப்பட்டு அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு வருகிறது. 1 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்ததால் அனைத்து மாவட்டங்களுக்கும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. கொரோனா மூன்றாவது அக்டோபர், நவம்பரில் உண்டாகும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பள்ளிகள் திறப்பதில் மேலும் சிக்கல் நீடித்துள்ளது.

இந்நிலையில் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார் .

அப்போது பேசிய அவர் , தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்பதே பரவலாக மக்கள் கருத்தாக உள்ளது. இந்த கருத்துக்களே அதிகம் வருவதாக ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சரின் முடிவுகளின் அடிப்படையிலேயே நீட் தேர்வு குறித்த நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்றின் மூன்றாம் கட்ட அலை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.