குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் இல்லாத இந்திய தேசத்தை உருவாக்குவோம் என கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக உறுதி மொழி ஏற்கப்பட்டது.

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்திட, உலக குழந்தைத்  தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ம் நாள் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக சாய்பாபாகாலனி, கவுண்டம்பாளையம், குனியமுத்தூர், காந்திபுரம், கரும்புகடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. கொரோனா கால ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி சமூக விலகலுடன் உறுதி மொழி ஏற்பு நடைபெற்றது.

இதில், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி உறுதி மொழி எடுக்கப்பட்டது. பின்னர் அவர் கூறுகையில், கல்வி பயின்று, மிளிரவேண்டிய குழந்தை பருவத்தில், வேலைக்கு சென்று பளுவினைச் சுமக்கும் குழந்தைகளை, குழந்தைத் தொழிலாளர் முறையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உறுதி செய்ய பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தற்போது செயல்படுத்தி வருவதாக கூறிய அவர்,சமுதாயத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை வழங்க பல்சமய நல்லுறவு இயக்கம் முன் வரும் என அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் ராதாகிருஷ்ணன், அயூப், சஞ்சய், அபுதாகீர், ஹரி கிருஷ்ணன், சமீர், ஹசன், முகம்மது அலி, ஹரீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.