கோவை அரசு கலைக் கல்லூரியில் தடுப்பூசி இல்லை என்ற அறிவிப்பை சுகாதாரத்துறையினர் கரும்பலகையில் இன்று (05.05.2021) எழுதி வைத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது.இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில், இந்த தடுப்பூசிகள் செலுத்தபட்டு வந்த நிலையில் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் வருவதால் தடுப்பூசி மையம் கோவை அரசு கலைக்கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
18 வயது நிரம்பியவர்கள் மே 1ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் கோவையில் தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் 45 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாகவே தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக தடுப்பூசி செலுத்த வரும் பொதுமக்கள் சுகாதாரத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து வந்தன.
இந்நிலையில் இன்று தடுப்பூசி முற்றிலுமாக இல்லை என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு அரசு கலைக் கல்லூரி வாயிலில் கரும்பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களை மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது. .