மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய யானைகள் சிறப்பு முகாம்

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் 48 நாட்கள் நடைபெறும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நேற்று (08.02.2021) தொடங்கியது.

முகாமை அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.  முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் யானைகள் மற்றும் மடங்களுக்கு சொந்தமான யானைகள் என 26 யானைகள் பங்கேற்றுள்ளன. இதற்காக யானைகள் லாரிகள் மூலம் முகாம் நடைபெறும் தேக்கம்பட்டி ஊராட்சிக்கு அழைத்து வரப்பட்டன. 48 நாட்கள் நடைபெறும் புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு பவானி ஆற்றங்கரையில் ஷவர் குளியலுடன் ஊட்டச்சத்து மாவு கலவை, பசுந்தீவனம் உள்ளிட்டவை உணவாக வழங்கப்படுகின்றன.  மேலும் மருத்துவ பரிசோதனையுடன், தினசரி  நடைப்பயிற்சியும் அளிக்கப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து யானையுடன் வரும் பாகர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தபட்டுள்ளதுடன் அவர்களுக்கு யானை பராமரிப்பு குறித்த பயிற்சியும் அளிக்கப்படுகின்றன.

முகாமிற்கு வந்த யானைகள் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒன்றை ஒன்று சந்தித்த கொண்ட நிலையில் பாசத்தை வெளிப்படுத்தி கட்டி தழுவி கொண்டன.