நபார்டு வங்கயின் நிதி ஆண்டுக்கான வளன் சார் கடன் திட்ட அறிக்கை வெளியீடு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கயின் 2021-2022 ஆம் நிதி ஆண்டுக்கான வளன் சார் கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி வெளியிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷன் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலாராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், இணை இயக்குநர் சித்ராதேவி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், கோவை மாவட்டத்தில் விவசாயம் மட்டுமின்றி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களும் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. வங்கிகளின் சேவை இத்துறைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. 2021-2022 ஆம் நிதி ஆண்டுக்கான வளன் சார் கடன் திட்டத்தினை செயலாக்குவதில் வங்கிகள் முழு முனைப்புடன் செயல்படவேண்டும்.

வேளாண் தொழில்களுக்கு ரூ.8,038.07 கோடி (35 சதவீதம்), சிறு, குறு மற்றும் நடுத்த தொழில்களுக்கு ரூ.9,982.13 கோடி (43 சதவீதம்), இதர தொழில்களுக்கு ரூ.4,945.26 கோடி (22 சதவீதம்) என மொத்தம் ரூ.22,965.47கோடியில் 2021-2022 ஆம் ஆண்டிற்கு வளன் சார் கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நிகழ்ஆண்டை காட்டிலும் வரும் ஆண்டிற்கான நிதி ஆற்றல் 11.72% உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற கடன்வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை ஒரு லாபகரமான வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும். வேளாண்மையில் இயந்திரமயமாக்கல், சொட்டு மற்றும் தெளிப்பு நீர்பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும். இந்த திட்ட அறிக்கையானது மாவட்டத்தின் கடன் திட்டமிடுதலில் ஒரு அங்கமாக இருந்து வங்கிகளுக்கு கிளை அளவிலான கடன் குறியீட்டை நிர்ணயம் செய்வதற்கு உதவிகரமாக இருக்கும், என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.