மாலை நேரங்களில் உலா வரும் காட்டு யானைகள் : பொதுமக்கள் அச்சம்

கோவை குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பகுதியில் நேற்று (20.12.2020) இரவு 8 மணியளவில் வந்த காட்டு யானை அங்கிருந்த வீட்டின் கேட்டினை உடைத்து உள்ளிருக்கும் பொருட்களை வெளியே வீசியது, இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியது. அதன்பின்பு அருகிலுள்ள தோட்டத்தில் புகுந்து பயிரிட்டிருந்த சோளப்பயிர்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து தொப்பம்பட்டி, ஆனந்தன் கார்டன், கணபதி கார்டன் பகுதிகளில் 4 யானைகள் இரு பிரிவுகளாக உலா வந்தது

தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அங்கு வந்த வனத்துறையினர் 4 யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியினை மேற்கொண்டனர். இதனை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவிலும் யானைகள் குடியிருப்புகளுக்கு உலா வரும் காட்சிகள் பதிவாகியுள்ளது. மாலை 7 மணி அளவில் இருந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் பன்னிமடை சாலைகளில் பயணிக்கும்போது எச்சரிக்கையாக இருக்குமாறும் வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.