கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கேக் கண்காட்சி

கோவை: கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் கே.ஆர்.எஸ்.  பேக்கரி நிறுவனத்தினர் கேக் கண்காட்சியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வருடம் நடைபெற்ற கேக் கண்காட்சியில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை  பாதுகாப்பாக கொண்டாடும் வகையில், தனி நபர் இடைவெளி, முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கேக்குகளை உருவாக்கி உள்ளனர். இன்று(19.12.2020) முதல் வரும் 31 ஆம் தேதி வரை கேக் கண்காட்சி நடைபெற உள்ளது.

இதில் பிளம் கேக், ப்ரூட் கேக், வால்நட் கேக் உள்ளிட்ட பல்வேறு பிளேவர்களில் கேக்குகள் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர்கள் நிற்பது போன்று தத்ரூபமாக கேக்குகளை உருவாக்கி உள்ளனர். சுமார் 10 கிலோ அளவில் தயாரிக்கப்பட்ட இந்த கேக் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இது குறித்து கே.ஆர்.எஸ்.பேக்கரியின் உரிமையாளர் நரேஷ் கூறுகையில், கடந்த சில மாதங்களாக சுணக்கமாக இருந்த பேக்கரி வர்த்தகம் தற்போது மெதுவாக மீண்டு வருவதாக அவர் தெரிவித்தார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வருவதையொட்டி நடைபெறும் இந்த கேக் கண்காட்சி பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.