மரணத்தின் விளிம்பிற்கே சென்று கின்னஸ் சாதனை படைத்த கராத்தே மாஸ்டர்ஸ்

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தற்காப்புக் கலை ஆசிரியர் பிரபாகர் ரெட்டி பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். இந்நிலையில், பிரபாகர் ரெட்டியும் அவரது மாணவரான நெல்லூரைச் சேர்ந்த பாயில்லா ராகேஷ் என்பவரும் இணைந்து கடந்த மாதம் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

ஒருவர் படுத்துக்கொள்ள அவரை சுற்றி தேங்காய்களை வரிசையாக வைத்து மற்றொருவர் கண்களைக் கட்டிக்கொண்டு  சுத்தியலால் அந்த தேங்காய்களை அடித்து உடைக்க வேண்டும். இதை இருவரும் கடந்த 6 மாதங்களாக பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும் கூறி இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் கின்னஸ் சாதனைப் புத்தகத்திற்கான சாதனையில் இவர்கள் பங்கேற்று இருக்கின்றனர். இந்தச் சாதனையாளர்களுக்கு ஒரு நிமிடத்தில் 35 தேங்காய்களை உடைக்க வேண்டும் என விதிமுறை கொடுக்கப்பட்ட நிலையில் இருவரும் ஒரு நிமிடத்தில் 49 தேங்காய்களை உடைத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கின்றனர்.