சாஸ்திர கலைக்களஞ்சியம் கோபிநாத் கவிராஜ் பிறந்த தினம்

சமஸ்கிருத அறிஞரும், தத்துவ ஞானியுமான பண்டிட் கோபிநாத் கவிராஜ் 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி வங்கதேச தலைநகர் தாக்கா அருகே உள்ள தாம்ரே கிராமத்தில் பிறந்தார்.

யோகியாக, தாந்த்ரீக ஞானியாக விளங்கிய இவர், படைப்பாற்றல் மிக்கவராகவும் திகழ்ந்தார். ‘விஷீத்த வாணி”, ‘அகண்ட மஹாயோக்”, ‘பாரதிய சன்ஸ்க்ருதி கீசாதனா”, ‘தாந்த்ரிக் சாஹித்ய” உட்பட பல நூல்களைப் படைத்தார்.

பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1934 ஆம் ஆண்டு ‘மகாமகோபாத்தியாய” விருது வழங்கி சிறப்பித்தது. பத்ம விபூஷண், சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

வேதம், பண்டைய இந்திய வரலாறு, புராணங்கள், இந்திய – ஐரோப்பிய இலக்கியம் ஆகியவற்றில் ஆழ்ந்த ஞானம் பெற்றவர். சாஸ்திரங்கள் பற்றிய அனைத்து விஷயங்களையும் விரல்நுனியில் வைத்திருந்த கலைக்களஞ்சியமாகத் திகழ்ந்தார்.

தத்துவங்கள், மதங்கள் தொடர்பான 1,500 புத்தகங்கள் கொண்ட நூலகத்தை தனிப்பட்ட முறையில் வைத்திருந்தார். புத்தக அறிவு போதாது, அது சுய அறிதலோடு சேர்ந்திருக்க வேண்டும் என்று கூறுவார். தலைசிறந்த தத்துவ ஞானியான பண்டிட் கோபிநாத் கவிராஜ் 1976 ஆம் ஆண்டு மறைந்தார்.