ராமகிருஷ்ணா கல்லூரியில் முன்னாள் மாணவர்களோடு ஆசிரியர் தின கொண்டாட்டம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்களோடு ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் திருவுருவப்படத்திற்கு ஆசிரியர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார், துணை முதல்வர் எஸ்.தீனா ஆகியோருக்கு கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பிரபு வாழ்த்துக்களை தெரிவித்தார். ராமகிருஷ்ணா கல்லூரியில் பயின்று இன்று அதே கல்லூரியிலும், பிற கல்லூரிகளிலும் பேராசிரியர்களாகப் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் இணைந்து தங்களது ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பூங்கொத்துகளோடு புத்தகங்களையும் நினைவுப் பரிசாக வழங்கினார்கள். மேலும், இணைய வழியாகவும் ஆயிரக் கணக்கான மாணவர்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். கல்லூரியின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் விஜயகுமார், வணிகவியல் புல முதன்மையர் சண்முகானந்த வடிவேல், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.