மருதமலை தேவஸ்தானம் பள்ளியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க முடிவு

கோவை மருதமலையில் உள்ள தேவஸ்தானம் மேல் நிலைப் பள்ளியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கோவையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை பிரதான மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இது தவிர கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், கொடிசியாவில் சுமார் மூன்று ஹால்களில் படுக்கைகள் அமைக்கப்பட்டு கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இதுதவிர பொள்ளாச்சி மற்றும் அன்னூர் பகுதிகளிலும் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், கொடிசியாவில் மற்றுமொரு ஹாலில் சிகிச்சை மையம் அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மருதமலை தேவஸ்தானம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அங்கு கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இன்று (20.8.2020) ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் முன்னேற்பாடாக இந்த மையம் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.