கல்யாண் ஜூவல்லர்ஸ் ஊழியர்கள் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் கல்யாண் ஜூவல்லர்ஸ்  நகைக்கடையைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று ஏற்பட்டதால், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கடை மூடப்பட்டது.

இந்நிலையில், அங்குபணியாற்றி வந்த 90 ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அவர்கள் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை, அரசு மருத்துவமனை, கொடிசியா வளாகம், கற்பகம் மருத்துவமனை ஆகிய இடங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஓரே கடையில், 51 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், கடந்த ஒரு வாரத்திற்குள் நகைக் கடைக்குச் சென்று வந்தவர்கள், தாமாக முன்வந்து, அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், அஜாக்கிரதையாக செயல்பட்டு, பல பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணமாக இருந்த கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாகம் மீது சுகாதார துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரின், அடிப்படையில் இரு பிரிவுகளின் கீழ் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.