தேர்வெழுதாமல் மருத்துவ மாணவர்களுக்குத் தேர்ச்சி கிடையாது: இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவு

மருத்துவ மாணவர்கள் தங்களின் தேர்வுகளை எழுதாமல் அடுத்த ஆண்டுக்குத் தேர்ச்சி அளிக்க முடியாது என்று இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர்களைத் தேர்வில்லாமல் தேர்ச்சி செய்து வருகின்றன அல்லது அக மதிப்பீடு மதிப்பெண் முறையில் தேர்ச்சி வழங்கி வருகின்றன. வேலைவாய்ப்புக்காகக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

இதற்கிடையே மருத்துவ மாணவர்களுக்கு என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இது தொடர்பாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்தும் பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்துவது பற்றியும் இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தலை வழங்கி உள்ளது.

அதில், ”செய்முறை, ஆய்வகம் உள்ளிட்ட எம்பிபிஎஸ் படிப்புகளை முடிப்பதில் கல்லூரிகள் கவனம் கொள்ள வேண்டும். கல்லூரிகளைத் திறந்து 2 மாதங்களுக்கு உள்ளாக அல்லது அரசு அனுமதித்த பிறகு இதை மேற்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகத் தேர்வுகளை மருத்துவ மாணவர்களுக்கு ஒரு மாதத்துக்குள்ளாக நடத்தி முடிக்க வேண்டும்.

அதேநேரம் 2020-ம் ஆண்டு முதல் பாதியில் நடைபெறுவதாக இருந்த மருத்துவ இறுதியாண்டுத் தேர்வின் மீதித் தேர்வுகளை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ நடத்த வேண்டியது அவசியம். கல்லூரிகளைத் திறக்கும் வரை இறுதியாண்டு மாணவர்கள் தேர்வுகளுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை.

அத்தகைய மாணவர்கள் இறுதித் தேர்வு முடிந்ததும் மருத்துவக் கல்லூரிகளிலோ, மருத்துவமனைகளிலோ பயிற்சிக்காகச் சேரலாம். மருத்துவ மாணவர்கள் தங்களின் தேர்வுகளை எழுதாமல் அடுத்த ஆண்டுக்குத் தேர்ச்சி அளிக்க முடியாது” என்று இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது.

 

Source – Hindu Tamil