தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க அனுமதி: முதல்வர் பழனிசாமி உத்தரவு

தமிழ்நாட்டில் வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க அனுமதி அளித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

“தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச் சங்கத்தின் (Tamil Nadu Gym Owners & Trainers Welfare Association) சார்பில் அதன் நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ள உடற்பயிற்சியகங்களைத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

அக்கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்வருமாறு ஆணை பிறப்பித்துள்ளார்.

மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள் (stand alone only), 50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் ஆக.10 முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல்முறைகள் (Standard Operation Procedure) தனியாக வெளியிடப்படும். அவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.